புதுதில்லி:
நுகர்வோர் விலைவாசிக் குறியீட் டெண்ணிற்கான அடிப்படை ஆண்டை 2016ஆவது ஆண்டாக மாற்றியது ஏன் என்று, மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய தொழிலாளர்துறைஅமைச்சகத்தின் லேபர் பீரோ அலுவலகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளன.
இது தொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் லேபர் பீரோவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்ணின் அடிப்படை ஆண்டைமாற்றுவது தொடர்பாக தொழிற் சங்கங்களின் கருத்துக்களை, மிகவும் குறுகிய கால இடைவெளியில் கேட்டிருப்பதற்கு, குறிப்பாக கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப் பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இவ்வாறு கேட்டிருப்பதற்கு கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது மத்திய தொழிலாளர் நலஅமைச்சகம், “இருதரப்பு/முத்தரப்புக்” கூட்டத்தைக் கூட்டித்தான் இவ்வாறு முடிவு எடுக்கிறது என்று கூறுவதைக் கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. இது தொடர்பாக முப்பது நாட்கள் காலத்தில் தொழிற்சங்கங்களின் விரிவான பதிலை அளிக்கிறோம். அதற்கிடையில் கீழ்க்கண்ட முறையில் எங்களின் விமர்சனங்களை முன்வைக்கிறோம்.
(1) அடிப்படை ஆண்டாக 2016 முன்மொழியப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக 2020 ஜூலையில் லேபர் பீரோவின்இணையதளத்தில் அடிப்படை ஆண் டாக 2013-14ஐ வைத்துக்கொள்ளலாம் என்பதுபோன்று குறிப்பிட்டிருந்தது. அது ஏன் 2016 என்று மாற்றப்பட்டது? முக்கியமாக, லேபர் பீரோவே, 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பின் காரணமாக 2016 நவம்பரில் விலைவாசிகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டியிருந்த நிலையில், இப்போது ஏன்அது இவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறது? இவ்வாறு மாற்றப்படுவதற்கு முன்பு, இது தொடர்பாக தொழிற் சங் கங்களுடன் கலந்தாலோசனை அவசியமாகும்.
வெளிச்சந்தை விலைவாசியை கணக்கில் கொள்க!
2.)விலைவாசியைக் கணக்கில் கொள்வதற்கு, பொது விநியோக முறையில் அளிக்கப்படும் உணவுப் பொருள் களின் விலைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தொழிலாளர்களில் பலர் பொது விநியோக முறையில் பொருள்களை வாங்குவதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர். எனவே, வெளிச்சந்தையில் உள்ள பொருள்களின் விலைவாசி மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.3). 2001 வரிசைக்கு இணையாக 2016 வரிசையில் எண்களை மாற்றுவதற்கு 2.88 இணைப்புக் காரணியாகக் கொள்ளப்பட்டிருப்பது மிகவும் குறைவானதாகவே தோன்றுகிறது. இதற்கு முன் 1982/2001 (19 ஆண்டுகால இடைவெளி)க்கான இணைப்புக் காரணி 4.63 ஆகவும், 1960/1982 (22 ஆண்டுகால இடைவெளி)க்கான இணைப்புக் காரணி 4.93ஆகவும் இருந்தன. எனவே, இப்போது 2001/2006 (15 ஆண்டுகால இடைவெளி)க்கான இணைப்புக் காரணி அதேபோன்ற அடிப்படையில் 3.5 ஆகத்தான்இருந்திட வேண்டும்.(4) கைத்தறி மற்றும் கட்டுமானத்துறைகளும் இவற்றில் இணைத்துக்கொள்ளப்படுவதற்கு பரிசீலிக்கப்பட வேண்டும். சுமைதூக்குதல்/சுமை இறக்கிவைத்தல் தொழிலும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. (ந.நி.)